வியாழன், 20 மார்ச், 2008

ரூ.28 கோடி “பிராடு’ குடலில் கத்தி; கிழித்து வெளியே வரும் அபாயம்!: ஆபரேஷன் செய்வதா வயிற்றிலேயே விடுவதா டாக்டர்கள் குழப்பம்

வங்கிகளில் ரூ. 28 கோடி மோசடி செய்த பலே குற்றவாளி, தப்புவதற்காக விழுங்கிய கத்தி, இப்போது குடலில் “புதைந்து’ பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை செய்து கத்தியை வெளியே எடுப் பதா, வயிற்றிலேயே விட்டு விடலாமா என்று சிறை டாக்டர்கள் குழம்பிப் போயுள்ளனர். கோல்கட்டாவை சேர்ந்தவர் அமரேந்திர நாத் கோஷ்; சில ஆண்டுகளுக்கு முன், பல வங்கிகளில் 28 கோடி ரூபாய் மோசடி செய்தான்; போலீஸ் விசாரணை செய்து, அவனை பிடிக்க முயன்றபோது, ஜெர்மனிக்கு தப்பி ஓடிவிட்டான். சர்வதேச போலீஸ் “இன்டர்போல்’ உதவியுடன் ஜெர்மனியில், 2003ம் ஆண்டு அவன் கைது செய்யப் பட்டான். சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க, ஜெர்மனி போலீசார் ஒப்புக்கொண்டனர். இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்பதற்காக, அமரேந்திரா கத்தியை விழுங்கிவிட்டான். “என் வயிற்றில் கத்தி உள்ளது. இந்தியாவுக்கு கொண்டு போகும் போது, வயிற்றில் உள்ள கத்தி, இடம்மாறி, என் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறேன். அதனால், என்னை இந்தியாவுக்கு கொண்டு செல்லக்கூடாது’ என்று ஜெர்மனி கோர்ட்டில் மனு செய்தான் அமரேந்திரா. இதற்கு பதில் அளித்த சி.பி.ஐ., அதிகாரிகள், “எங்களுடன் மருத்துவக் குழுவை அழைத்து வந்துள்ளோம். அதனால், குற்றவாளி உயிருக்கு ஆபத்து நேர வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தனர். இதை கோர்ட் ஏற்றுக்கொண்டு, சி.பி.ஐ.,யிடம் அவனை ஒப்படைக்க கடந்தாண்டு உத்தரவிட்டது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம், விசேஷ விமானத்தில் அமரேந்திரா கோல்கட்டா கொண்டு வரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டான். அவனை டாக்டர்கள் பரிசோதித்தனர். ஸ்கேன் எடுத்துப் பார்த்ததில் அவன் விழுங்கிய கத்தி, பெருங்குடலில் புதைந்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இப்போதும் அவன் குடலில் கத்தி உள்ளது. அதைச்சுற்றி தசைநார்கள் வளர்ந்து விட்டன. எந்த சமயத்திலும் கத்தி, குடலை கிழித்துக் கொண்டு வெளியே வரும் அபாயம் உள்ளது. அமரேந்திராவுக்கு அறுவை சிகிச்சை செய்து, கத்தியை வெளியே எடுத்து விடலாமா, வயிற்றிலேயே விட்டு விடலாமா என்பதில் டாக்டர்கள் குழம்பியுள்ளனர்.


சிறையில் அவனை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவ நிபுணர் குழு, “கத்தியை உடனே வெளியே எடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், அது குடலை கிழிக்க வாய்ப்புண்டு; உயிருக்கே ஆபத்தாகி விடும். அறுவை சிகிச்சை செய்யும் போது, குடலுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று எச்சரித்தது.

ஆனால், அமரேந்திரா அலட்டிக் கொள்ளவே இல்லை. “எனக்கு யோகா தெரியும்; கத்தியால் எனக்கு ஆபத்து வராது; அதற்காக நான் தினமும் விசேஷ யோகா பயிற்சி செய்து வருகிறேன். குடலில் தசையோடு தசையாக கத்தியும் சேர்ந்து விட்டது. எனக்கு ஒரு பாதிப்பும் இதுவரை இல்லை’ என்று தெரிவித்தான்.

‘குற்றவாளி வயிற்றில் கத்தி உள்ளதால், எங்களால் விசாரணையை முடிக்க முடியவில்லை. அதை வெளியே எடுத்தால் தான் அவனிடம் முழுமையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியும்’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை: