இறந்து போன கணவரின் சகோதரர்களால் ஆபத்து ஏற்படும் எனக் கருதி, நான்கு குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே ஏழு ஆண்டுகள் பூட்டிவைத்திருந்தார் மனநிலை தவறிய 60 வயது தாய். அவர்களை, கிரைம் பிராஞ்ச் பெண் போலீசார் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆமதாபாத்தை சேர்ந்தவர் பிரிதம் கவுர். இவரது கணவர் ஜஸ்பிர். குல்தீப் கவுர் (24) என்ற மகளும், நரேந்திர சிங் (26), திரிலோசன் சிங் (22), ஹர் பஜன் சிங் (19) என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களில் ஹர்பஜன் சிங், வாய் பேச முடியாத, காது கேளாதவர். கணவர் ஜஸ்பிர் இறந்து போனதை அடுத்து, கோம்திபூரில் உள்ள ஒரு வீட்டில், தனது குழந்தைகளுடன் குடியேறினார் பிரிதம் கவுர். ஆரம்பத்தில், அண்டை வீட்டாருடன் சகஜமாகத்தான் பழகினார். குல்தீப் கவுர் எல்லாருடனும் எளிதில் பழகக்கூடியவர்; புத்திசாலி. இறந்து போன, ஜஸ்பிரின் சகோதரர்கள் ஆரம்பத்தில் அவ்வப்போது, இவர்களை வந்து பார்த்து சென்றனர். சில மாதங்களில் அது நின்று போனது. இந்த வீட்டில் குடியேறிய சில நாட்களிலேயே, பின் பக்கத்துக் கதவை பூட்டினார் பிரிதிம் கவுர். அதன் பிறகு முன் பக்க கதவையும் மூடிக் கொண்டார். வீட்டுக்கு அருகில் யாராவது வந்தால், அவர்களைத் திட்டுவார்; சத்தம் போடுவார். இதனால், அக்கம்பக்கத்தார் ஒதுங்கிக் கொண்டனர்.குழந்தைகளை கட்டிப்போட்டு, கதவையும் பூட்டி விட்டு, அருகில் உள்ள குருதுவாரா சென்று பிரசாதம் வாங்கி வருவார். வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொள்வார்.
அந்த பிரசாதம் தான், அந்த குடும்பத்துக்கு நாள் முழுவதும் சாப்பாடு. ஆண்டுக்கணக்கில், குழந்தைகளை வீட்டுக்குள்ளேயே பிரிதம் கவுர் அடைத்து வைத்திருப்பது குறித்து, அக்கம் பக்கத்தவர்கள் போலீசில் தெரிவித்தனர். ஆனால், அதை போலீசார் கண்டு கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் மூலம் போலீசை அணுகினர். கிரைம் பிராஞ்ச் பெண் போலீசார், ஏழு ஆண்டுக்கு பின் அந்த வீட்டின் கதவை உடைத்து திறந்தனர்.
உள்ளே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. கதவைத் திறந்ததும், தாங்க முடியாத துர்நாற்றம் வீசியது.வெட்டப்படாத நகம், நீண்டு வளர்ந்த தாடி, தலைமுடி, மாதக்கணக்கில் துவைக்கப்படாத துணி, ஆண்டுக்கணக்கில் சுத்தம் செய்யப்படாத வீடு என்று அலங்கோலமாக காட்சியளித்தது. அந்த வீட்டின் ஒரே அறையில் தான் அனைவரும் இருந்தனர்.
போலீசை பார்த்ததும் அவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அவர்களை வெளியே அழைத்து வந்த போது, வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கண்களை, கைகளால் மூடிக் கொண்டனர். சிகிச்சைக்காக அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மனநிலை தவறிய பிரிதம் கவுர், மறைந்த தனது கணவரின் சகோதரர்கள் மூலம், தனது குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதியதால் தான், அவர்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக