இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற்றப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய கொம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியச் செயலாளரும் தமிழ்நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டவருமான டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அறிக்கை நேற்று புதன்கிழமை இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கை மீதான விவாதத்தின் போது டி.ராஜா பேசியதாவது:
சிறிலங்கா அரசாங்கமும் அமெரிக்க அரசாங்கமும் இராணுவ ஆதரவு தொடர்பிலான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
ஆனால் இந்திய அரசாங்கம் இதுவரை அந்த ஒப்பந்தம் தொடர்பில் எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பு வகித்தது இந்தியா. ஆனால் இப்போது அது எங்கே போனது?
அணிசேரா கொள்கையே இந்தியாவின் கொள்கை என உங்களால் இப்போது கூற முடியுமா?
மேற்காசியாவில் இஸ்ரேலை தம் பக்கம் வைத்திருப்பது போல் தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவை தம் பக்கம் வைத்துக்கொள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது. இஸ்ரேல் வகிக்கும் பாத்திரத்தை இந்தியா வகிக்க அமெரிக்கா விரும்புகிறது.
அதனை நாம் ஒப்புக்கொள்கிறோமா?
இந்த ஆசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அமெரிக்கா முயற்சிக்கிறது. அதனை நாம் ஒப்புக் கொள்ளக் கூடாது.
இலங்கை நிகழ்வுகள் அதனையே நமக்கு உணர்த்துகின்றன.
இங்கே இலங்கை நிலைமை பற்றி என்னுடைய நண்பர் (அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன்) இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் பற்றி நாம் அவசியம் பேசித்தான் ஆக வேண்டும்.
இலங்கையில் சிறார்கள் எப்படி படுகொலை செய்யப்படுகிறார்கள்?
இலங்கையில் விதவைப் பெண்கள் எப்படி துன்பத்துக்குள்ளாகிறார்கள்?
பொதுமக்கள் அங்கே எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? என்பது குறித்து அவர் நிச்சயம் பேச வேண்டும். அவர் அதனைவிடுத்து மற்றவை பற்றிப் பேசினார்.
கச்சத்தீவு விடயம் ஒரு கவலைக்குரியதுதான்.
கச்சத்தீவு ஒப்பந்தத்தை மேற்கொண்டது யார்?
அந்த ஒப்பந்தம் மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. அது மாநில அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அல்ல. ஆகையால் கச்சத்தீவு தொடர்பில் மாநில அரசாங்கத்தை நீங்கள் குற்றம்சாட்ட இயலாது.
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையேயான ஒப்பந்தம் அது.
அந்த ஒப்பந்தத்திலே ஏதாவது மாற்றங்களைச் செய்ய வேண்டுமாயின் நம்மால் செய்ய முடியும். இன்றைய நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவையுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இப்படி செயற்படுமேயானால் (தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினால்) நாம் அத்தகைய செயற்பாடுகளை சகித்துக் கொண்டிருக்க முடியாது.
சிறிலங்கா கடலில் கண்ணிவெடிகளை எப்படிப் போட்டது? இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று நேற்றுக்கூட நான் கேள்வி எழுப்பினேன்.
இங்கே பாதுகாப்பு அமைச்சர் இப்போதும் அமர்ந்திருக்கிறார்- வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அமர்ந்திருக்கிறார்.
நமக்கு அருகாமையில் உள்ள ஒரு நட்பு நாடு, கடலிலே கண்ணிவெடிகளை புதைக்கின்றபோது மத்திய அரசாங்கத்தினது நிலைப்பாடு என்ன?
அது எந்த வகையிலாவது அனைத்துலக நடைமுறைகளுக்கு உகந்ததா?
இதற்கு எப்படி விளக்கம் அளிப்பீர்கள்?
ஏன் இந்தியா மௌனம் காக்கிறது?
அங்கே உள்ள போர்ச் சூழல் தமிழர்களுக்கு எதிரான போராக மாறிவருகிறது.
நான் எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்புக்காகவும் வாதாடவில்லை.
"தமிழ் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என்ற அடிப்படையில் பேசுகிறேன்.
"அங்கே (இலங்கையில்) இராணுவ வழித் தீர்வில் சாத்தியமில்லை" என்று பிரணாப் முகர்ஜி தனது அறிக்கையில் (இந்திய வெளிவிவகார அறிக்கையில்) தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியளிக்கிறது.
ஆனால் அது பதில் அல்ல.
ஒவ்வொருவரும் அரசியல் வழித் தீர்வுக்காக கடுமையாக முயற்சிக்கின்றனர்.
ஆனால், என்ன அரசியல் தீர்வு?
இந்திய அமைதிப் படை காலத்தைய 13 ஆவது சரத்து இப்போது பேசுகின்றனர்.
உண்மையில் இந்திய அமைதிப்படை தொடர்பிலான இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தில் உண்மையிலே அது இடம்பெற்றிருக்குமேயானால் அது பற்றிய இப்போதைய நிலைப்பாடு என்ன?
இத்தகைய விடயங்களுக்கும் நாம் இப்போது முகம் கொடுக்க வேண்டும்.
இந்தியா ஆக்கபூர்வமான சக்தியாக செயற்பட வேண்டும். நமது பிராந்தியத்தில் அமெரிக்கா மேற்கொள்ளும் நாசகார நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட முயற்சிக்க வேண்டும்.
பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் இந்தியா மேற்கொண்டுள்ள யதார்த்தப்பூர்வ அணுகுமுறைகளை நாம் பாராட்டுகிறோம்.
ஆனால் தெற்கே, தென்னிந்தியாவில், இந்து மா சமுத்திரம், இலங்கை தொடர்பில் தனது அணுகுமுறையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும். குறிப்பாக இராணுவ மோதல் நிகழும் இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை மாற வேண்டும் என்றார் அவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக