வியாழன், 20 மார்ச், 2008

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் இப்போது வெளியேறக் கூடாது: புஷ்

இராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் இப்போது வெளியேறினால், அருகில் உள்ள ஈரான் அரசு, அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு பயங்கர ஆயுதங்களைக் கொடுத்து, அமெரிக்காவைத் தாக்க முயற்சிக்கும் என்று அமெரிக்க அதிபர் புஷ் கூறியுள்ளார்.

2003-ம் ஆண்டு இராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்தன. அந்நாட்டின் அதிபர் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அந்நாட்டில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடக்கின்றன். அமெரிக்க வீரர்கள் 3990 பேர் இதுவரை இந்த போரில் இறந்துள்ளனர். இதுவரை சுமார் ரூ.20 லட்சம் கோடியை அமெரிக்க ராணுவம் இந்த போருக்காக செலவு செய்துள்ளது.

இராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்து 5 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி வாஷிங்டனில் ராணுவத் தலைமையகத்தில் புஷ் பேசினார். இராக் போரில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்தனர். அரசுக்கு பெரும் செலவாகியுள்ளது. எனினும் அதற்காகக் கவலைப்படவில்லை. அமெரிக்கப் படைகளை இராக்கில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்று வாஷிங்டனில் சிலர் கூறுகின்றனர்.

அப்படி வாபஸ் பெற்றால் அல் காய்தா பயங்கரவாதிகளுக்கு ஈரான் உதவும். பணமும், பயங்கர ஆயுதங்களும் பயங்கரவாதிகளுக்குக் கொடுத்து அமெரிக்காவைத் தாக்க ஈரான் தூண்டும்.

இராக் போரில் அமெரிக்காவுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான் என்னை குறை சொல்பவர்கள், இந்தப் போரினால் அரசுக்கு அதிக செலவு ஏற்படுகிறது என்றும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள் என்றார் புஷ். அவர் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் புஷ்ஷின் இராக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர்.

இராக்கில் புதிய அரசை ஏற்படுத்துவதும் அங்குள்ள பல்வேறு பிரிவினரிடையே உள்ள மோதலை நிறுத்துவதும், அந்த நாட்டு மக்களின் உள்ள பொறுப்பு. அந்த வேலையில் ஈடுபடாமல், அமெரிக்கப் படைகள் திரும்பி வர வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி ஜான் டிங்கெல் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: