வியாழன், 20 மார்ச், 2008

பூமியின் ஆயுசு இன்னும் 759 கோடி ஆண்டுகள் தான்

பூமியின் ஆயுசு இன்னும் 759 கோடி ஆண்டுகள் தான். இதன் பிறகு, சூரியன், பூமியை விழுங்கி விடும்!’ விண்வெளி குறித்து ஆய்வு நடத்தி வரும் விஞ்ஞானிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.சூரியன் ஒரு நட்சத்திரம், நாள்பட, நாள்பட சூரியன் பிரமாண்டமாகி, அதிகபட்சமாக பிரகாசிக்கும். ஈர்ப்பு விசை அதிகமாகி சூரியனை, பூமி நெருங்கி ஆவியாகி விடும் என்பது, விண்வெளி விஞ்ஞானிகளின் கருத்து. இது நடக்க பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆகும் என்பது அவர்களின் கணிப்பு. எனினும், கடந்த ஆண்டு, விண்வெளியில், “இறந்து’ விட்ட நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதை, ஒரு கிரகம் சுற்றி வருவதையும் பார்த்தனர். எனவே, சூரியன் அழிந்து விட்டாலும், பூமிக்கு ஆபத்து இருக்காது என்ற, கருத்து பரவியது. இதை முறியடிக்கும் விதத்தில், புதிய கருத்தை இரண்டு விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். மெக்சிகோவில் உள்ள குவானஜுவாடோ பல்கலைக் கழகத்தை சேர்ந்த க்ளாஸ் பீட்டர் ஸ்க்ருடர், இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ராபர்ட் கானான் ஸ்மித் ஆகியோர் வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு: இன்னும், 759 கோடி ஆண்டுகளில் சூரியன் மிகப்பெரியதாகி விடும். பூமியை அதன் வட்டப்பாதையில் இருந்து இழுத்து, சூரியன் விழுங்கி விடும். அதன் பிறகு பூமியே இருக்காது. எனவே, பிரபஞ்சத்தில், மனிதர்கள் தங்கும் வகையில், வேறு கிரகம் உள்ளதா என்பதை தேட வேண்டிய, நேரம் வந்து விட்டது. இயற்கை மாறுதலை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில், நாம் உள்ளோம். இன்று நாம், போற்றி பாராட்டி வரும், இமயமலை, ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன், இல்லை. ஆசிய கண்ட தட்டுடன், இந்திய கண்ட தட்டு மோதியதால் தான் இமயமலையே உருவானது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: