வியாழன், 20 மார்ச், 2008

மதம் மாறிய மகன்கள் மறுத்ததால், தாயின் சிதைக்கு கொள்ளி இட்டார் மகள்

மதம் மாறிய மகன்கள் மறுத்ததால்,வேறு வழியின்றி தாயின் சிதைக்கு மகள் கொள்ளி போட்ட சம்பவம் சென்னை அருகே நடந்தது. சென்னை புழல் அடுத்த காவாங்கரை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மன்னார். இவரது மனைவி ஏகாத்தம்மாள்(82). இவர்களுக்கு நாகேஸ்வரராவ், மூர்த்தி என்ற மகன்களும், ஜெயந்தி(45) என்ற மகளும் உள்ளனர். ஜெயந்தி புழலில் உள்ள ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் திலீப்குமார் சிங். ஏகாத்தம்மாளின் கணவர் மன்னார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஏகாத்தம்மாள் நேற்று முன்தினம் இறந்தார். இந்து மத முறைப்படி தாயின் சிதைக்கு தலைமகன் கொள்ளி போட வேண்டும். ஆனால் அவரது மகன்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தங்களது குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர். தற்போது தாங்கள் கடைப்பிடித்து வரும் மதச் சட்டப்படி, தாயின் சிதைக்கு கொள்ளி போட முடியாது என மறுத்து விட்டனர். இதனால் பேரப் பிள்ளைகளும், பாட்டிக்கு கொள்ளி போட முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து குடும்பத்தினர் அவர்களிடம் பேசியும் அவர்கள் உடன்படவில்லை. இந்நிலையில் வேறு வழியின்றி தாயின் சிதைக்கு, தானே கொள்ளி போட மகள் ஜெயந்தி முன் வந்தார். நேற்று முன்தினம் மாலை நடந்த இறுதிச் சடங்கில், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாடு வரை அவர் தீச்சட்டி ஏந்திச் சென்றார். பின்னர் வழக்கமான இறுதிச் சடங்குகள் முடிந்த பின், தாயின் சிதைக்கு கொள்ளி வைத்தார். இந்த சம்பவம் உறவினர்களையும், அப்பகுதி மக்களையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

கருத்துகள் இல்லை: