வியாழன், 20 மார்ச், 2008

நிச்சயதார்த்த மோதிரத்தை சமையல்காரர் எடுத்தாரா?: டயானா மரணத்தில் மேலும் திருப்பங்கள்

சாலை விபத்தில் சிக்கி, டயானா இறந்த பின் அவரது மோதிரத்தை சமையல்காரர் எடுத்துக்கொண்டார் என தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எகிப்து நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் அல்பயதுவின் மகன் டோடி. விவகாரத்துக்குப் பின் டயானாவும் இவரும் காதலித்து வந்தனர்.

கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி பாரீஸ் சுரங்கச் சாலையில் ஏற்பட்ட விபத்தில் டயானா, டோடி, டிரைவர் பால் ஆகியோர் பலியாகினர். பாதுகாவலர் ரீஸ் ஜோன்ஸ் மட்டுமே இந்த விபத்தில் உயிர் தப்பினார். பிரிட்டன் அரச குடும்பத்தின் சதியினால் தான் தனது மகனும் டயானாவும் கொல்லப்பட்டனர் என அல்பயது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். டயானாவிடம் சமையல்காரராக பணிபுரிந்த பால் புரீலின் பாதுகாவலர் மைக்கேல் பாக்ஸ். இவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், கார் விபத்தில் டயானா இறந்த பின் அவரது நிச்சயதார்த்த மோதிரத்தை சமையல்காரர் பால் புரீல் எடுத்துக் கொண்டார் எனத் தெரிவித்தார். இதையடுத்து டயானாவின் சாவில் மேலும் பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. டயானவின் மோதிரத்தை தான் வைத்திருப்பதாக பால் புரீல் என்னிடம் தெரிவித்திருக்கிறார். அந்த மோதிரத்தை நானும் பார்த்திருக்கிறேன். அரச குடும்பத்தின் மோதிரங்கள், ஆவணங்கள், லெட்டர் பேட், பேப்பர்கள் ஆகியவற்றை பால் வைத்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என லண்டனில் வெளிவரும் ஒரு பத்திரிகையிலும் மைக்கேல் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் பால் புரீல், மைக்கேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். விபத்து நடந்த போது, பால் எவ்வாறு அங்கு வந்தார் என்பது குறித்த விபரங்கள் வழக்கில் தெரிவிக்கப்படவில்லை. விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்புதான் டோடி, அந்த நிச்சயதார்த்த மோதிரத்தை டயானாவுக்கு அணிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: